Friday 14 March 2014

தக்காளியில் ,ஊறுகாய் மற்றும் தக்காளி ஜாம் தயாரிப்பது எப்படி..?


1) தக்காளி ஊறுகாய்!



தேவையான பொருட்கள்:

நன்றாகப் பழுத்தத் தக்காளி - ஒரு கிலோ,

 மிளகாய்த்தூள் - 2, டேபிள் ஸ்பூன்,

வெந்தயம் - 1 ஸ்பூன்,

ரீஃபைண்ட் ஆயில் - 250 மில்லி,

பூண்டு - 20 பல்,

பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்,

கடுகு - 1 ஸ்பூன்,

உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு


தக்காளியை நன்றாக சுத்தம் செய்து மிக்ஸியில் நன்கு கூழாகும் வரை அரைக்க வேண்டும்.

 இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வாணலியில் இட்டு அடுப்பில் வைத்துச் சூடாக்க வேண்டும்.

நன்கு கொதிக்கும் நிலையில் நீர்வற்றி கெட்டியாக மாறும். அப்போது சூடு படுத்திய எண்ணெயை தக்காளியுடன் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

 அடுப்பு மிதமாக எரியும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தக்காளிக் கலவை கொதி வந்த பிறகு, கலவையில் உள்ள எண்ணெய் முழுவதும் பிரிந்து வரும் வரை வேகவிட்டு, பின்பு இறக்க வேண்டும்.

பிறகு, வறுத்துத் தூளாக்கிய வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து பூண்டை சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கி தக்காளிக் கலவையில் சேர்த்து, நன்றாக ஆறவிட்டு, ஈரம் இல்லாத பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்க வேண்டும்.

 இது, சாதாரண நிலையிலேயே ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதனப் பெட்டிகளில் பாதுகாத்தால் நீண்டநாட்களுக்கு வைத்திருக்கலாம்.

இதை, அனைத்து உணவுகளுக்கும் தொட்டுச் சாப்பிட பயன்படுத்தலாம்.
------------
2) தக்காளி ஜாம்!



தேவையான பொருட்கள்:

தக்காளி பழக்கூழ் - ஒரு கிலோ.

 சர்க்கரை - 750 கிராம்.

 சிட்ரிக் அமிலம் அல்லது எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி.

தக்காளியைச் சுத்தம் செய்து தோல், விதைகளை நீக்கி சதைப்பகுதிகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும்.

அவற்றை மிக்ஸி மூலம் கூழாகும் வரை அரைத்து வடிகட்ட வேண்டும் (இதுதான் தக்காளி பழக்கூழ்).

கொஞ்சம் போல தண்ணீர் எடுத்து, அதில் சிட்ரிக் அமிலத்தைக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தக்காளிக் கூழை பாத்திரத்தில் இட்டு, சிறிது நேரம் வேகவிட்டு ஒரு கொதி வந்தவுடன் சர்க்கரையைச் சேர்த்து, அடுத்து சிட்ரிக் அமிலம் கலந்த தண்ணீரை ஊற்ற வேண்டும்.

நன்றாகக் கொதித்துக் கொண்டிருக்கும் கலவையை ஒரு ஸ்பூனில் சிறிதளவு எடுத்து ஒரு தட்டில் ஊற்றிப் பார்த்தால்... கெட்டியாக விழ வேண்டும்.

அதுவரை கலவை வேக வேண்டும். இந்தப் பதம் வந்தபின் பாத்திரத்தை இறக்கி வைத்து கொஞ்சம் மட்டும் ஆறவிட்டு, வாய் அகன்ற கண்ணாடி பாட்டில்களில் சூடாகவே நிரப்பி வைக்க வேண்டும்.

இந்த நிலையிலேயே முழுவதும் ஆறவிட்டு, அதன்பிறகு பாட்டில்களை மூடி வைக்க வேண்டும்.

 சூடானக் கலவையை பாட்டில்களில் நிரப்பும்போது பாட்டில்களை தரை மீது வைப்பதைத் தவிர்த்து, மரப்பலகை மீது வைத்துக் கொண்டால், சூட்டின் மூலம் பாட்டில்கள் உடைந்து போகாமல் தடுக்க முடியும். 

0 comments:

Post a Comment