வங்கிக்குள் நுழைந்து பெண் ஊழியருக்கு கட்டாய தாலி கட்ட முயன்ற வியாபாரி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சித்தூர் மாவட்டம் புங்கனூர் அடுத்த கொத்தஇன்லு பகுதியை சேர்ந்தவர் விஜய கிருஷ்ணா (40). இவர் புங்கனூரில் மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
என்டிஆர் சந்திப்பில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரியும் 22 வயது பெண் ஊழியரை ஒருதலையாக காதலித்துள்ளார். இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு வங்கி மேலாளரிடம் அந்த பெண் முறையிட்டார்.
அதன்பின், புங்கனூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார், விஜயகிருஷ்ணா மற்றும் அவரது பெற்றோரை காவல் நிலையம் வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில் நேற்று தாலி கயிறு, மாலைகள், இனிப்புகள் ஆகியவற்றை எடுத்து கொண்டு தனது நண்பர்கள் கர்நாடக மாநிலம் சீனிவாசபுரம் சவுடனஹள்ளி பகுதியை சேர்ந்த வீரபத்ரா, பெங்களூர் ஆர்.கே.புரத்தை சேர்ந்த வெங்கட ரெட்டி ஆகியோருடன் விஜய கிருஷ்ணா வங்கிக்குள் திடீரென புகுந்தார்.
அங்கிருந்த ஊழியர் ஜலபதி அவர்களை தடுத்து நிறுத்தினார். ஆத்திரம் அடைந்த விஜயகிருஷ்ணா தரப்பினர் அவரை சரமாரியாக தாக்கினர்.
வங்கி மேலாளர் சுதாகர் ராவையும் தாக்கிய விஜய கிருஷ்ணா, உள்ளே சென்று தான் ஒருதலையாக காதலிக்கும் பெண் ஊழியருக்கு கட்டாய தாலி கட்ட முயன்றுள்ளார். அதை வங்கி ஊழியர்கள் சேர்ந்து தடுத்தனர்.
இதுகுறித்து புங்கனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடம் வந்த போலீசார், விஜய கிருஷ்ணா உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். வங்கிக்குள் நுழைந்து பெண் ஊழியருக்கு கட்டாய தாலி கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
0 comments:
Post a Comment